திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேலூர் நாராயணி பீடம் சக்தி அம்மா சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த வேலூர் நாராயணி பீடம் சக்தி அம்மாவிற்கு, தேவஸ்தான அர்ச்சகர்கள் இஸ்தி கபால் மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து சக்தி அம்மா ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் தேவஸ்தானம் சார்பில் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசு வழங்கினர். மேலும், தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் சக்தி அம்மா நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தேவஸ்தான நிர்வாகத்தினர் வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.
எங்கும் இல்லாத அளவிற்கு திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கும் வசதிகள் சிறப்பாக உள்ளது. இதற்காக நான் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். அப்போது, கலவை சச்சிதானந்த சுவாமிகள், அமைச்சர் பெத்தி ரெட்டி ராமசந்திர ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத், பொக்கசம் பொறுப்பாளர் குருராஜராவ், பேஸ்கார் லோகநாதம், புரம் இயக்குனர் சுரேஷ், நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் உடன் இருந்தனர்.