×

தென்னிலை பகுதியில் பரவும் வைரஸ் காய்ச்சல்: மக்கள் பீதி

க.பரமத்தி: தென்னிலை பகுதிகளில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். காய்ச்சலை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக்கப், டயர், தேங்காய் ஓடுகள் என தேங்கிக் கிடக்கும் கழிவு பொருட்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிவருகிறது.

தென்னிலை கடைவீதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கட்டிடங்களுக்கு வெளி புறங்களில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் கொசுகடியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ மாணவிகள் 5க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து  ஊராட்சிகள், கல்வித்துறைகள் மற்றும் பொது மக்களுக்கு சுகாதாரத்துறைகள்  மூலம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்தியது.

இதற்காக அதிகமான மஸ்தூர் பணியாளர்களை கொண்டு கிராமங்களில் தேங்கி கிடக்கும்  சாக்கடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட தேவையற்ற நீர் நிலைகளை அழிப்பது,  வீடுகளுக்குச் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்து தெளித்தல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தடுப்பு பணிகளை செய்து வந்தனர்.   தற்போது இப்பணிகளை 100நாள் வேலை பணியாளர்களை கொண்டு செய்து வருகின்றனர். இந்த பணியாளர்களால் சரி வர பணிகள் நடப்பதில்லை. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மட்டுமே கொசு மருந்து நடக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு தேவையற்ற நீர் நிலைகள் மூலம் மீண்டும் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.  பகல் நேரங்களில் கொசுக்கள் கடித்து வருகிறது. எனவே உடனடியாக அரசு கிராமப் புறங்கள் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து தேங்கி கிடக்கும் கழிவுப் பொருட்களை அப்புறபடுத்தவும், ஏற்கனவே செயல் பட்ட மஸ்தூர் பணியாளர்களை விட கூடுதலாக அந்தந்த பகுதிகளில் பணிகளுக்கு ஈடு படுத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : South ,spread , In South, spread, viral fever, people panic
× RELATED கந்தர்வக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில்...