×

அடுத்த வாரம் இன்னும் 4 முக்கிய தீர்ப்புகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வு பெற உள்ள 17ம் தேதிக்குள் 4 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளார்.
* ரபேல் ஜெட் கொள்முதலில் மோடி அரசு எந்த தவறும் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு 14ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் தீர்ப்பு அளிக்கிறார்.

* ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடன் என கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கிரிமினல் கண்டன நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதும் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

* சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பும் வழங்கப்படுகிறது.

* உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வருகிறது என டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர் ஜெனரல், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதும் கோகாய் அமர்வு தீர்ப்பு அளிக்கிறது.

முதல் முறையாக சனிக்கிழமை தீர்ப்பு:
அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதோடு, சனிக்கிழமை அன்று தீர்ப்பு அளித்திருப்பதும் வரலாற்றில் முதல் முறை சம்பவமாகும். 69 ஆண்டு கால உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தீர்ப்பும் சனிக்கிழமையில் வழங்கப்பட்டதில்லை.
வழக்கமாக, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நீதிமன்றத்தின் பணி நாட்களாக உள்ளன. முக்கிய வழக்கு விசாரணைகள் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் நள்ளிரவு முதல் விடிய விடிய கூட நடந்திருக்கிறது. ஆனால், முதல் முறையாக தீர்ப்பு நாளை சனிக்கிழமையாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தேர்ந்தெடுத்திருப்பது கூட வரலாற்று சிறப்புமிக்கதாகி உள்ளது.

லட்சியம் நிறைவேறியது நிர்மோகி அகாரா மகிழ்ச்சி:
அயோத்தி வழக்கு தீர்ப்பில், நிர்மோகி அகாரா மனு நிராகரிக்கப்பட்டதற்கு நாங்கள் வருத்தப்படவில்லை. நாங்கள் ராம்லாலா அமைப்புக்காகவும் போராடினோம். ராம்லாலா தரப்பின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டதன் மூலம் எங்களுடைய லட்சியம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கரசேவையில் பங்கேற்ற தம்பியின் ஆன்மா சாந்தி:
பாபர் மசூதி இடிப்பின் போது கொல்லப்பட்ட கரசேவகர்களின் உறவினர்கள் தீர்ப்பு குறித்து கூறுகையில், ‘`எங்கள் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. இந்த நீதி கிடைப்பதற்காக நாங்கள் 29 ஆண்டுகள் காத்திருந்தோம். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக இறந்த எனது தம்பியின் ஆன்மா இப்போதுதான் சாந்தி அடையும். இது எங்களுக்கு இரண்டாவது தீபாவளி, ஹோலி பண்டிகையை போன்றது. ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் போது அயோத்தி சென்று உயிரிழந்த கர சேவகர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

பாலிவுட் வரவேற்பு:
இந்த தீர்ப்பை பொதுமக்கள் நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாலிவுட் சினிமா உலக கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது உங்களுக்கு எதிரானதாக இருந்தாலும் ஏற்பது நமது கடமை என்று பர்கான் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார். குணால் கபூர் கூறுகையில், இது அமைதி நிலவ வேண்டிய நேரம் என தெரிவித்துள்ளார். நடிகர் விக்ராந்த் மாசே கூறுகையில், நமது நாளை என்பது நேற்றை விட சிறப்பானதாக இருக்கும். இந்தியா வலிமையானதாகவும் ஒற்றுமையுடனும் இருக்க பிரார்த்திக்கிறேன். கியூமா குரஷேி கூறுகையில், எனதருமை இந்தியர்களே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மரியாதை தாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

* தீர்ப்பு குறித்து பல்வேறு நாட்டு தூதர்களும் கருத்து தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தவிர பல்வேறு நட்பு நாடுகளும் கருத்துகளை பதிவிட்டுள்ளதாகவும் ஆனால் எத்தனை தூதர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எந்த விதமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர் என தெரிவிக்கப்படவில்லை.

புத்தகமாக மாறுகிறது தொல்லியல் ஆதாரம்:
அயோத்தி நில வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்து தொல்லியில் துறை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை புத்தகமாக வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்தார். தீர்ப்பு வெளியான பின் இது தொடர்பாக பேசிய அவர், தற்போது வரை நீதிமன்றத்தின் சொத்தாக இருக்கும் தொல்லியல் துறையின் அயோத்தி அகழ்வாராய்ச்சி அறிக்கை விரைவில் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. தங்கள் முயற்சியால் இந்த அறிக்கையை தயாரித்த தொல்லியல் நிபுணர்களுக்கு நன்றி என்று கூறினார்.

உ.பி. முதல்வர் யோகி அழைப்பு:
உபி .முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்கு ஒவ்வொருவரும் ஆதரவாக இருக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது,’’ என்றார்.

Tags : Next week, 4 major, judgments
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...