×

கர்நாடக தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு நவ.13ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் நவ.13ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த 17 எம்எல்ஏக்கள் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சி அமைவதற்கு உதவியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்தது. பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான எம்எல்ஏக்கள் பலம் இல்லாமல் குமாரசாமி  தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆட்சி கவிழ காரணமாக இருந்த 17 எம்எல்ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில் 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் 15 இடங்களில் டிச.5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிட வசதியாக தீர்ப்பை  விரைந்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர். இதை ஏற்ற உச்சநீதிமன்றம் கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நவ.13ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று வழக்கு பட்டியலில் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : Karnataka , Karnataka, MLAs to remove merit
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!