×

வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை பெற முடியவில்லை: தமிழகத்தில் முடங்கிய இ-சேவை மையங்கள்

* காரணம் சர்வர் பழுது என்கிறார்கள் அதிகாரிகள்
* சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு ரேஷன் கார்டு, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட எந்த சான்றிதழ்களும் பெற முடியாமல் தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்கள் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் எப்போது சென்றாலும், சர்வர் பழுதால் வேலை செய்ய முடியவில்லை என்று ஊழியர்கள் காரணம் கூறி, திருப்பி அனுப்புகிறார்கள். தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தும் வகையில் சென்னையில் பத்து இடங்களில் இ-சேவை மையங்கள் துவக்கி வைக்கப்படும் என்று 2013-2014ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக 24.02.2014 அன்று தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் சென்னையில் இ-சேவை மையங்கள் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் இ-சேவை மையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் 486 இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலம், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ் போன்ற வருவாய்த்துறையின் சான்றிதழ்களை வழங்கும் சேவைகளும், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான  திருமண நிதி உதவி திட்டம் போன்ற சமூகநலத் துறை திட்டங்கள் சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது.

இதையும் தவிர்த்து மக்களின் அன்றாட தேவையான திட்டங்களை இ-சேவை மையம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மின்னணு ரேஷன் கார்டில் உள்ள படங்களை மாற்றம் செய்வது, பெயர் திருத்தம் மற்றும் ஆதார் கார்ட்டில் உள்ள பெயர்கள், படம், விலாசம் திருத்தம் செய்வது, வாக்காளர் அடையாள அட்டையில் புதிதாக கலர் படம் மாற்றுவது, பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இ-சேவை மையத்தில் பணம் கட்டி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், சமீப காலமாக இந்த இ-சேவை மையங்களுக்கு பொதுமக்கள் எப்போது சென்றாலும், குறிப்பிட்ட சான்றிதழ்களையோ, ஆதார் அட்டையில் திருத்தம், மின்னணு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவை எதையும் பெற முடியவில்லை. சர்வர் பழுதாகியுள்ளது. பிறகு வாருங்கள் என்று அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் அரசின் சலுகை மற்றும் கல்வி கடன் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதோடு, ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து இ-சேவை மைய ஊழியரிடம் கேட்டபோது, கடந்த நான்கு நாட்களாக மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சர்வர் பழுதாகியுள்ளது. அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். 100க்கும் மேற்பட்ட மக்கள் சேவைக்கு ஒரு நிறுவனத்தின் சர்வரை மட்டுமே சார்ந்து பணியாற்றுவதும் இதற்கு ஒரு காரணம். கூடுதல் சர்வர்களை பயன்படுத்த வேண்டும். விரைவில் நிலைமை சீராகும் என்று நினைக்கிறோம் ” என்றார்.

மரியாதை குறைவாக நடத்துகிறார்கள்:
சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்ற வழக்கறிஞர் முருகானந்தம் கூறும்போது, “தமிழக அரசால் நடத்தப்படும் எந்த இ-சேவை மையங்களும் சில நாட்களாக வேலை செய்வதே இல்லை. அங்குள்ள பணியாளர்களும் பொதுமக்களிடம் மரியாதையாக பேசுவதில்லை. ஏதோ அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்துக்கொண்டு அரட்டை அடிப்பதற்காக இ-சேவை மையத்தை பயன்படுத்துகிறார்கள். பொதுமக்கள் எப்போது சென்றாலும், சர்வர் பழுதானதால், சான்றிதழ் பதிவு செய்ய முடியாது என்கிறார்கள். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையில் உள்ள படம் மற்றும் திருத்தம் செய்ய பலமுறை சென்றபோதும், சர்வர் வேலை செய்யவில்லை என்றே பதில் கூறுகிறார்கள்.

இ-சேவை மையங்களில் உள்ள இடைத்தரகர்கள் என்னிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு சான்றிதழ் வாங்கித் தருகிறேன். அதற்கு இவ்வளவு தொகை கொடுங்கள் என்று கேட்கின்றனர். இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்தால் சான்றிதழ் ஓரிரு தினங்களிலேயே கிடைத்து விடுகிறது. ஆனால் முறையாக விண்ணப்பித்தால் ஒரு மாதம் ஆனாலும் சான்றிதழ் கிடைப்பதில்லை. வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்கள்.

ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்போருக்கு அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் வழங்கி வந்தார். தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இ-கவர்னஸ் எனும் அரசு சேவை மையங்கள் மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது ஆனால் இது முறையாக செயல்படவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களில் கடந்த நான்கு நாட்களாக சர்வர் பழுதால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகள் உடனடி நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.

Tags : centers ,Tamil Nadu , Voter card, ration card, Aadhaar card, unable, disabled, e-service centers in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!