சென்னை: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. மயிலாப்பூரில் திருவள்ளுவர் கி.பி 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 8ம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இதனால், அங்கு கிபி. 16ம் ஆண்டு திருவள்ளுவர் கோயில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கற்சிலையாக வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் மூலவராகவும், அவரது மனைவி வாசுகி, ஏகாம்பரேஸ்வரர், துர்கை, முருகர், தட்சணாமூர்த்தி, விநாயகர் ஆகியாருக்கு தனியாக அங்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோயில் கடந்த 1985ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்த திருவள்ளுவர் கோயில் கடந்த 2001ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இந்த நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது திடீரென திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, இணை ஆணையர் ஹரிப்பிரியா திருவள்ளுவர் கோயிலில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தற்போது அந்த கோயில்களில் நடந்து வரும் பணிகள் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து அந்த கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த கோயில்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கும்பாபிஷகம் நடத்தப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறும் போது, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் காலை திருவள்ளுவருக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கு காலை, மாலை பூஜை நடக்கிறது. திருவள்ளுவருக்கு அர்ச்சகர்கள் தமிழில் வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோயிலில் கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து நடத்தப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடக்கிறது‘ என்றார். இந்த கோயிலில் கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து நடத்தப்படுகிறது.