சேலம்: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜூலைக்குள் அடிக்கல் நாட்டப்படும் என சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். அரசு முதன்மை செயலாளர்கள் ககன்தீப் சிங் பேடி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, குறைதீர் முகாமில் மனு வழங்கிய 5,723 பயனாளிகளுக்கு, ₹25.89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ₹18.88 கோடி மதிப்பில் நிறைவுற்ற 43 பணிகள் மற்றும் 24 கூட்டுறவு சிறப்பங்காடிகளை தொடங்கி வைத்து, ₹112.35 கோடியில் 116 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு குறைதீர் முகாமில், 9.72 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 5.11 லட்சம் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டு, பல்வேறு காரணங்களால் 4.37 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 23 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவை மீண்டும் பரிசீலனை செய்யப்படும். தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை பெறுவோருக்கான சொத்து மதிப்பு, ₹50 ஆயிரத்தில் இருந்து ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் படிப்படியாக வீடுகள் கட்டி தரப்படும். குடிசை இல்லா முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற பாடுபட்டு வருகிறோம். பல துறைகளில் விருதுகள் பெற்று, அதிக தேசிய விருதுகள் பெற்ற ஒரே மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மேட்டூர் உபரி நீர் ₹615 கோடி மதிப்பில், 100 ஏரிகளில் நிரப்பப்படும். அடுத்த மார்ச்-ஏப்ரலுக்குள் அடிக்கல் நாட்டப்பட்டு, ஓராண்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். கோதாவரி-காவிரி இணைப்பு எங்களின் லட்சிய திட்டம். காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜூலை மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்தும். இதன் மூலம் தென் மாவட்டம் முழுவதும் செழிக்கும். தமிழகத்தில் நீர் பஞ்சம் இல்லை என்ற சூழ்நிலை உருவாகும். தமிழகத்தில் 234 தொகுதியிலும் சிறப்பு குறைதீர் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.