×

வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து நாம் உழைப்போம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு

கர்தார்பூர்: சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின், 550வது பிறந்த தினம், 12-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. குருநானக்கின் சமாதியான கர்தார்பூர்   சாஹிப், பாகிஸ்தானில், சர்வதேச எல்லையை ஒட்டி, ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக   கருதுகின்றனர். குருநானக் சமாதிக்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக்   நகரிலிருந்து சர்வதேச எல்லை வரை, மத்திய அரசு சிறப்பு பாதை அமைத்துள்ளது. அதேபோல் பாக்., எல்லையிலிருந்து கர்தார்பூர் சாஹிப் வரை   பாகிஸ்தான் சிறப்பு பாதை அமைத்துள்ளது.

இந்தப் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதற்காக உழைத்தமைக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி  தெரிவித்திருந்தார். தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கர்தார்பூர் பாதையை இன்று திறந்து வைத்த அந்நாட்டின் பிரதமர் இம்ரான்  கான் கூறுகையில், பஞ்சாப் முதல்வருக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் இதர பாராளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் பல நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கும் யாத்திரைக்காக இங்கு வந்துள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அஸ்ஸலாமு  அலைக்கும் என்றார்.

குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை கொண்டாடும் சீக்கிய மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த  கர்தார்பூர் பாதை பணிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து வைத்தமைக்காக உங்களுக்கும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கும் எனது  பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மனிதநேயமும் நீதியும் தான் மிருகங்களிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காட்டுகின்றன.  சூழ்நிலைக்கேற்ப பொருந்திக் கொள்வது மனிதநேயமல்ல. கடவுள் நமது இதயங்களில் குடியிருக்கிறார். மக்களை நீங்கள் மகிழ்வித்தால் கடவுளை  மகிழ்வித்ததாகும். இங்கு வந்துள்ள சீக்கிய மக்களின் மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்கிறேன் என்றார்.

இந்தியா பக்கமுள்ள எல்லையை பாகிஸ்தான் திறக்க வேண்டும் என நவ்ஜோத் சித்து என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் ஆட்சிக்கு வந்ததும் முதல்  வேலையாக வறுமை ஒழிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது தொடர்பாக நரேந்திர மோடியிடம் பேசினேன். காஷ்மீர் பிரச்சனையை  பக்கத்து வீட்டுக்காரர்கள் போல் அமர்ந்துபேசி தீர்த்துக் கொள்ளலாம் என அவரிடம் நான் கூறினேன். நாம் இனி மனிதர்களாக இருப்போம் என்பதை திரு.  மோடி அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்றார்.

சாத்தியமானவற்றை மட்டும் சிந்தித்து வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து நாம் உழைப்போம் என்றார். ஜெர்மனியும்  பிரான்சும் முன்னர் போரில் சண்டையிட்ட நாடுகள்தான். ஆனால், அவர்களை இப்போது பாருங்கள். எல்லை கடந்த அவர்களது நட்புறவும் வர்த்தகமும்  வளர்ந்து வருவதை பாருங்கள். நமது துணைக்கண்டத்திலும் இதுபோன்ற வளர்ச்சியை நான் காண விரும்புகிறேன் என்று கூறினார்.



Tags : Imran Khan ,speech , Let us work together to eradicate poverty and poverty: Prime Minister Imran Khan
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு