×

20 ஆண்டு கோரிக்கை நிறைவேறவில்லை கழிவுநீரோடை இல்லாததால் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: புலவன்பட்டி பொதுமக்கள் பாதிப்பு

வி.கே.புரம்: சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோவில் தெருவை  மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வீடுகளில் உள்ள கழிவுநீர், மழைநீர் வெளியேற கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இத்தெருவிலுள்ள மக்கள் மழைக்காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வரமுடிவதில்லை.இந்நிலையில் நேற்று மாலை வி.கே.புரம் மற்றும் சிவந்திபுரம் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் புலவன்பட்டி மூர்த்தி சுவாமி கோவில் தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வீட்டிற்குள் மழைநீர் புகும் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்தது.இதனையடுத்து தெருவிலுள்ள மக்கள் ஞானதிரவியம், ஜெயக்குமார் ஆகியோரது வீட்டில் உள்ள தடுப்பு சுவரில் துளையிட்டு மழைநீரை அகற்றினர். இதனால் வீடுகளுக்கு வெள்ளம் புகாமல் தடுக்கப்பட்டது. இதுபற்றி அப்பகுதி பெண்கள் கூறியதாவது: ‘கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் என்று ஊராட்சியிலும், அம்பை ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் இதுவரை கழிவு நீர்ஓடைகள்  கட்டப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்’ என வலியுறுத்தினர்.

Tags : Rainwater Surrounding Houses , Demand, waste stream, rainwater, field table
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு