×

இரண்டாம் சீசன் நிறைவடைந்தும் ஊட்டியில் குவியும் மாணவர்கள்: சுற்றுலா தலங்கள் களைகட்டின

ஊட்டி: இரண்டாம் சீசன் முடிந்தும் ஊட்டிக்கு வரும் அண்டை மாநில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் சீசன் மற்றும் இரண்டாம் சீசன்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டி நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு நாள்தோறும் பல ஆயிரம் பேர் வந்து செல்வது வழக்கம். இரண்டாம் சீசனில், முதல் சீசன் போன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்காது. மற்ற நாட்களை காட்டிலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள்.

குறிப்பாக, இவ்விரு மாதங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள். இந்நிலையில், இம்முறையும் வழக்கம் போல், கடந்த இரு மாதங்கள் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இரண்டாம் சீசன் முடிந்த நிலையில் தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரம் உள்ளிட்ட அனைத்து அலங்காரங்களும் அகற்றப்பட்டன. எனினும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை. குறிப்பாக, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுவும் கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் கல்வி சுற்றுலா வாகனங்கள் அதிகளவு வருகின்றன. இதனால், மலை ரயிலும் நிரம்பி வழிகிறது.

Tags : season ,Ooty , Season, Ooty, students, tourist attractions
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு