சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் புயலாக மாறி தற்போது மேற்குவங்க பகுதிக்கு நகர்ந்து சென்றுள்ளது. அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்ப சலனம் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில நாட்களாக கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சங்ககிரியில் 120 மிமீ மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை 90 மிமீ, மணல்மேல்குடி 80 மிமீ, திருமங்கலம் 70 மிமீ, நாகப்பட்டினம் 60 மிமீ, திருச்செங்கோடு, மதுரை விமான நிலையம், வாடிப்பட்டி, சோழவந்தான் 50 மிமீ, நத்தம், திருமயம், சேலம் 40 மிமீ மழை பெய்துள்ளது.
தொடர்ந்து, நேற்றும் வெப்ப சலனம் நீடித்தது. அதன் காரணமாக ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, சேலம், நாமக்கல், மதுரை, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.