சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, பூங்கா ரயில் நிலையங்களில் அடிக்கடி பயணிகளின் செல்போன், பணம் திருடு போவதாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மா குமாரி உத்தரவின் பேரில் நுங்கம்பாக்கம், எழும்பூர், பூங்கா, கடற்கரை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரயில் பூங்கா ரயில் நிலையம் வந்தது.
அப்போது அந்த ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியான ஒரு பெண் இறங்கி 2ம் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, பாபு நகரை சேர்ந்த தேவி (24) என்பதும், இவர், புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண் பயணிகளிடம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 பவுன் நகைகள் மற்றும் 46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.