×

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த தினேஷ்குமார் (16), ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர், நேற்று தேர்வு எழுதிவிட்டு, தனது நண்பர்கள் 15 பேருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சென்று, கடற்கரைக்கு சென்றார். அங்கு, கடலில் மாணவர்கள் குளித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய தினேஷ்குமார் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மாயமான தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் அடிக்கடி கடலில் குளிக்க சென்று உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. எனவே, காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : college student ,sea ,friends , college student caught , giant wave ,while bathing , sea with friends
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!