×

போனில் இளம் பெண்ணிடம் ஆபாச பேச்சு பிரபல நடிகர் மீது குற்றப் பத்திரிகை

திருவனந்தபுரம்: கேரளாவில்  போனில் இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் பிரபல மலையாள நடிகர்  விநாயகனுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தமிழ்  மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமானவர் நடிகர் விநாயகன். இவர் ‘மாந்திரீகம்’ என்ற  மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து சோட்டா மும்பை,  கம்மட்டிபாடம், சிந்தாமணி கொல கேஸ் உள்பட ஏராளமான படங்களில் வில்லன்  வேடங்களில் நடித்து பிரபலமானார். இதேபோல் பல படங்களில் நகைச்சுவை  வேடங்களிலும் நடித்து உள்ளார். சமீபத்தில் தொட்டப்பன் என்ற  படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதே போல் தமிழில் திமிரு உள்பட சில  படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கேரள அரசு கடந்த 2016ம் ஆண்டு சிறந்த  நடிகருக்கான விருது வழங்கியது.

இந்த நிலையில் கடந்த வருடம் ஒரு இளம் பெண்  தனது நிறுவன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு விநாயகனிடம் போனில்  தொடர்பு கொண்டுள்ளார். அப்போது விநாயகன் தன்னிடம் ஆபாசமாக  பேசியதாக கூறி அந்த இளம் பெண் கல்பெட்டா போலீசில் புகார் செய்தார். போலீசார் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு  பிறகு போலீசார் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். இந்த  நிலையில் இந்த வழக்கில் விநாயகனுக்கு எதிராக போலீசார் கல்பெட்டா  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் இளம் பெண்ணிடம்  தான் ஆபாசமாக பேசியது உண்மைதான் என்று விநாயகன் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மலையாள சினிமாவில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Tags : Porn talk,young woman ,phone
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...