*நோயாளிகள் குற்றச்சாட்டு
சோழவந்தான் : சோழவந்தான் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு காலாவதியான ’பிரட்’ வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சோழவந்தான் அரசு மருத்துவமனையில் தினமும் சுமார் 600 வெளி நோயாளிகள், சுமார் 30 புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தங்கி சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு பிரட், பால் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இங்கு உள் நோயாளியாக இருந்த, சோழவந்தான் கின்னிமட தெரு பிச்சைமணி மனைவி மகேஸ்வரிக்கு வழங்கப்பட்ட பிரட்டை உடனிருந்த அவரது மகன் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தான்.
பின் பிரட் பாக்கெட்டில் உள்ள தேதியை ஆராய்ந்த போது, அந்த பாக்கெட்டின் மேல் பகுதியில் காலாவதி தேதியை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதும், பிரட்கள் பூசனம் பிடித்திருப்பதையும், பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து பணியாளர்களிடம் தெரிவித்தபோது முறையான பதில் இல்லை. இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மூர்த்தி கூறுகையில், ‘ஏழை மக்கள்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு இதுபோல் காலாவதியான பிரட்களை வழங்குவது நியாயமா?. பிரட்டை சாப்பிட்ட சிறுவனுக்கு ஒவ்வாமையால் வாந்தி மட்டும் வந்ததால் சரியாகிவிட்டது.
பெரிய பிரச்னை என்றால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பொறுப்பேற்பார்களா? இங்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதா என உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.இதுகுறித்து முதன்மை மருத்துவ அலுவலர் கீதா கூறுகையில், ‘நோயாளிகளுக்கு தினமும் பிரட் வழங்கப்படுகிறது. அதை உடனே சாப்பிடாமல் நாள் கணக்கில் இருப்பு வைத்திருந்தால்தான் இதுபோல் பூசனம் பிடிக்க வாய்ப்புள்ளது” என்றார்.