×

வால்பாறை எஸ்டேட் பகுதியில் எழுந்து நடமாட முடியாத குட்டி, தாய் யானையின் பாசப்போராட்டம்

*6 வீடுகளை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம்

வால்பாறை : வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் வனங்களை விட்டு வெளியேறி கடந்த சில நாட்களாக மக்கள் வசிக்கும் பகுதியிலும், சிறுவனப்பகுதியிலும் முகாமிட்டு உணவு சாப்பிட்டு வருகின்றன. தாய்முடி, ஆனைமுடி, நல்லமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 3 வாரங்களாக 8 மாதம் ஆன குட்டி யானையுடன் தாய் யானை ஒன்று உலா வருகிறது. குட்டி யானையின் வலது பின்னங்கால் தடித்து, பருமன் அதிகமாக காணப்படுகிறது. மற்ற கால்கள் அனைத்தும் பலவீனமாக ஒல்லியாக காணப்படுகிறது.

இதனால் குட்டி யானையால் சரியாக நடக்க முடியவில்லை. குட்டி யானையை தும்பிக்கையால் தாய் யானை தூக்கி நிறுத்த முயல்கிறது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. இதனால் குட்டி யானையை விட்டு செல்ல முடியாமல் தாய் யானை தவிப்பதை பார்க்க முடிகிறது. கூட்டத்தில் இருந்து பிரிந்து காணப்படும் இந்த தாய் மற்றும் குட்டி யானையின் பாசப்போராட்டம் காண்போர் மனதை கண்கலங்க வைக்கிறது. குட்டி யானைக்கு பிறவி ஊனமா? அல்லது கால் உடைந்து உள்ளதா? என்ற கேள்விக்கு வனத்துறையிடம் பதில் இல்லை.

தற்போது தாய்முடி எஸ்டேட் புதுகாடு பகுதியில் தாய் யானையும், குட்டி யானையும் முகாமிட்டுள்ளன. குட்டி யானையால் சரியாக நடமாட முடியாததால் அதனை விட்டுவிட்டு தாய் யானை உணவு உட்கொள்ள வனப்பகுதிக்கு செல்வதில்லை. மற்ற வன விலங்குகளிடம் இருந்து குட்டி யானையை பாதுகாக்க தாய் யானை நினைக்கிறது. இதற்காக குடியிருப்பு பகுதியில் குட்டியானையை விட்டுவிட்டு அந்த பகுதியிலேயே தாய் யானையும் உணவு தேடுகிறது. இதற்காக குடியிருப்புகளை உடைத்தும், சேதப்படுத்தியும் வருகிறது. கடந்த 2 நாட்களில் 6 வீடுகளை யானை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 உணவிற்காக ஏங்கி நிற்கும் குட்டி யானை பிறவி ஊனமாக இருந்தால் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நோய்வாய்பட்டிருந்தால் மீட்டு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அவ்வாறு செய்தால்தான் தாய் யானையும் வனப்பகுதிக்குள் செல்லும். எனவே இது குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : estate ,elephant fight ,Valparai , Vaalparai ,Passion Struggle,Mother Elephant
× RELATED வால்பாறை அருகே காட்டு மாடு முட்டி தேயிலை தோட்ட தொழிலாளி பலி..!!