பெரம்பூர்: பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரபல ரவுடியாக வலம் வந்தவன் காக்கா தோப்பு பாலாஜி (35). இவன் மீது 21 கொலை வழக்குகள் உட்பட 51 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு வழக்குகளில் போலீசார் காக்காதோப்பு பாலாஜியை தேடிவந்த நிலையில் அவன் தொடர்ந்து போலீசில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து வந்தான். இந்நிலையில், நேற்று ராயப்பேட்டை அவ்வை சண்முகம் தெருவில், காக்கா தோப்பு பாலாஜி காரில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காக்கா தோப்பு பாலாஜியை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த கேரளாவை சேர்ந்த மணிகண்டன் (31) மற்றும் மணலியை சேர்ந்த சீனிவாசன் (32) ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 19 சவரன் நகை மற்றும் ₹35 ஆயிரம், மூன்று கத்திகள், செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர், வியாசர்பாடி எம்கேபி நகர் காவல் நிலையத்தில் வைத்து காக்கா தோப்பு பாலாஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அவன் எதற்காக ராயப்பேட்டை பகுதிக்கு வந்திருந்தான்? ஏதேனும் குற்ற சம்பவங்களை செயல்படுத்த வந்திருந்தானா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.