ஈரோடு: ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.31.83 லட்சத்தை, மாவட்ட கருவூலத்தில் போலீசார் ஒப்படைத்தனர். ஈரோடு பவானி மெயின்ரோடு அசோகபுரத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் அலுவலகம், அசோகபுரம் அய்யன்காடு ஈரோடு கூட்டுறவு தீவிர கைத்தறி வளர்ச்சி திட்ட அலுவலகம், சூளை பகுதியில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். 2 நாட்களாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.31 லட்சத்து 83 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, கைத்தறி மற்றும் துணி நூல்துறை உதவி இயக்குநர் ஸ்ரீதரன், துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் பழனிகுமார், கைத்தறி அலுவலர் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன அலுவலக மேலாளர் ஜோதி (எ) ஜோதிலிங்கம், அசோகபுரம் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் கணக்காளர் செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் ஈரோடு மாவட்ட கருவூலத்தில் முறைப்படி செலுத்தப்பட்டு ரசீது பெறப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய கணக்கு இல்லாத நிலையில் லஞ்சமாக வாங்கிய பணமா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.