பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் அமைச்சர் பாண்டியராஜன் உருவபொம்மை தூக்கில் தொங்க விடப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மிசா சட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது குறித்து, அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு உருவபொம்மையை தூக்கில் தொங்கவிட்டிருந்தனர். அதில் அமைச்சர் பாண்டியராஜன் என எழுதப்பட்டு இருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள், 50 அடிக்கு மேல் தொங்கி கொண்டிருந்த அந்த உருவபொம்மையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். நேற்று அதிகாலையில், தகவலறிந்த கிழக்கு போலீசார் விரைந்து சென்று அமைச்சர் பாண்டியராஜனின் உருவபொம்மையை அப்புறப்படுத்தினர். பின், அமைச்சர் பாண்டியராஜனின் உருவபொம்மையை தொங்கவிட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.