×

கேரள வனப்பகுதியில் 3 ஆண்டுகளாக மாவோயிஸ்ட்களுக்கு துப்பாக்கி பயிற்சி: வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்

கோவை: கடந்த 3 ஆண்டுகளாக கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகேயுள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் கார்த்திக், மாவோயிஸ்ட் தலைவன் என கூறப்படும் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மணிவாசகம், கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீமதி, சுரேஷ் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக்(எ)சந்து(28), கர்நாடகாவை சோனா, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி(20), ஆகிய 3 பேர் குண்டு காயங்களுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்து மறைந்து விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டைக்கு பின்னர் சம்பவ இடத்தில் பென் டிரைவ், லேப்டாப், செல்போன்கள், ஏராளமான டைரிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை உளவுப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

லேப்டாப்பை ஆய்வு செய்தபோது அதில் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சுடுவது போன்றும், பயிற்சி பெறுவது போன்றும், ஏராளமான வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்துள்ளன. அதனை வைத்து விசாரித்தபோது மாவோயிஸ்ட்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பது தெரியவந்துள்ளது. தீபக் குறி தவறாமல் துப்பாக்கி சுடுவதில் வல்லவர். கமாண்டோ பயிற்சியும் பெற்றுள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை மாவோயிஸ்ட்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், ஏராளமான மாவோயிஸ்ட்களுக்கு தீபக் துப்பாக்கி பயிற்சி கொடுத்ததாகவும் தெரிகிறது.

தற்போது மாவோயிஸ்ட்கள் காட்டுக்குள்  துப்பாக்கி பயிற்சி பெறுவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக  வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. போலீசார் சுட்டுக்கொன்றது மாவோயிஸ்ட்கள்  இல்லை, அவர்கள் ஆதிவாசிகள் என்ற பேச்சும் கேரளாவில் பரவலாக உள்ளது. அதனை  மறுக்கவே உளவுத்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி படங்களை சமூக  வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த மாவோயிஸ்ட்கள் தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு வனப்பகுதிகளிலும் தங்களுடைய திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்துள்ளனர். அவர்கள் ஏராளமான இடங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது துப்பாக்கிச்சூடு நடந்த மஞ்சகண்டி வனப்பகுதியில் ஒரு ஏகே-47 துப்பாக்கி, 6 நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அங்கு ஏராளமான ஆயுதங்கள் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே தப்பியோடிய 3 பேரையும் கண்டுபிடித்தால் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் 3 பேரும் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

Tags : forest ,Maoists ,Kerala , Maoist
× RELATED வயநாடு தொகுதி மக்களை...