×

அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்றது புல்புல் புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

டெல்லி: அந்தமான் அருகே புல்புல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு அரபிக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகின. அதாவது, கடந்த 24ம் தேதி அரபிக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறியது. இந்நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் கரையை கடந்தது. அதனை தொடர்ந்து  கடந்த 27ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலட்ச தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது.

இது ‘மகா’ என்ற புதிய புயல் சின்னமாக மாறியது. இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்று குஜராத் மற்றும் மராட்டியத்தில் மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் தற்போது இது தீவிர புயலாக வலுப்பெற்றள்ளது. புல்புல் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.  நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும். தொடர்ந்து மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

இந்த புயல் காற்று மணிக்கு 155 கி.மீ. வரைக்கும் வேகமுடன் வீச கூடும். இதனால் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதி சீற்றமுடன் காணப்படும்.  இதனை முன்னிட்டு வருகிற 11ந்தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Andaman ,fishermen ,Bulbul storm: Fishermen for Warning , Bulbul storm, alert to fishermen
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...