ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி 14வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி போன்ற பகுதிகளில் மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரி ராஜா தலைமையில் ஊழியர்கள் சார்பில் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும் கட்டுமான நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற 27 நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.