திருவொற்றியூர் : மணலி அருகே காமராஜ் சாலை மற்றும் மஞ்சம்பாக்கம் சாலை சந்திப்பில் சாலையோரம் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு சொந்தமான ராட்சத குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. சுமார் 12 அடி ஆழம் 10 அடி அகலம் கொண்ட இந்த தொட்டியில் புழல் ஏரியில் இருந்து வரக்கூடிய குடிநீரை பல்வேறு பகுதிகளுக்கு மாற்றுவதற்கான வால்வு அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் தொட்டியின் மீது போடப்பட்டிருந்த சிலாப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் ஏறியதால் உடைந்து திறந்து கிடந்தது. இங்கு அதிகமான வாகனங்களும் மாணவ, மாணவியர்கள் சைக்கிளிலும், நடந்தும் செல்வதால் நிலைதடுமாறி திறந்து கிடக்கும் இந்த குடிநீர் தொட்டியில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருந்தது.
இதுசம்பந்தமாக கடந்த 5ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் மஞ்சம்பாக்கம் சந்திப்பில் திறந்து கிடந்த குடிநீர் தொட்டி உள்ள இடத்திற்கு வந்தனர். பின்னர், தொட்டியின் கீழ் அமைந்துள்ள வால்வு அதிகமான பயன்பாடு இல்லாததால் தொட்டியின் உள்ளே மணல் போட்டு நிரப்பி அதன் மேலே சிலாப்புகளை வைத்து மூடினர். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.