சென்னை: திருவள்ளுவரை அனைவரும் சொந்தம் கொண்டாட நினைப்பதாக மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை 6.30 மணி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்னுடைய தந்தை அவருக்கு சிலைவைக்க விரும்பமாட்டார். அவரது சிலையை நாங்கள் விரும்பி வைக்கிறோம். அவர் சமூக சேவை செய்யவே விரும்புவார். இதனால் தான் பரமகுடியில் திறன் வளர்க்கும் மையத்தை தொடங்க உள்ளோம். கலை நடிப்பு என்பது எனது தொழில். அரசியல் என்பது மக்களுக்கான எனது கடமை. திருவள்ளுவரை எல்லா மதத்தினரும் அவர்களுக்கு சொந்தம் கொண்டாடுவது என்பது இது முதல் முறை அல்ல.
திருவள்ளுவர் கிறிஸ்துவரா என்று நானே பேச்சுப் போட்டியில் பேசி இருக்கிறேன். திருவள்ளுவர் யாருக்கும் சொந்தம் இல்லாமல் பொதுவானவர். திருவள்ளுவரை தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இதற்காக திருவள்ளுவருக்கு வர்ணம் பூசத் தேவை இல்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது நடந்தாலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மருதநாயகம் படம் எப்பொழுது நினைத்தாலும் வரும். ஆனால் அதில் நடிக்கிறேனா இல்லையா என்பதைத்தான் பார்க்கவேண்டும்.