×

முரசொலி நிலம் குறித்து வீண் பழி சொல்பவர்களுக்கு உரிய நேரத்தில் உண்மை நிரூபிப்பேன்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: முரசொலி நிலம் குறித்து பழி சுமத்துவோருக்கு, உரிய நேரத்தில் முரசொலி நிலம் தொடர்பாக ஆணையத்தில் உண்மையை நிரூபிப்பேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்கள், ஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்திடும் நோக்கில், தமிழர் நிலத்தில், மத அரசியலுக்கும், அடிமைத்தனத்திற்கும், பணநாயகத்திற்கும் சிறிதும் இடமில்லை என்பதை திமுக கூட்டணியை முழுமையாக ஆதரிப்பதின் மூலம் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள்.இந்நிலையில் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு, பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று. முதலில், ராமதாஸ், 17/10/2019 அன்று, ஒர் அறிக்கையினை வெளியிட்டார். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம்.

அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும், அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை.
மீண்டும் 19/10/2019ல் மூலப் பத்திரத்தினைக் காட்டிடவில்லையென்று ஓர் அறிக்கை தந்தார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும், குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும். முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம். 21/10/2019 அன்று பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் 22/10/2019 அன்றே நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே முதலமைச்சர், 24/10/2019 அன்று, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.

04/11/2019 அன்று, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, 19/11/2019 அன்று ஆஜராக உத்தரவிட்டிருப்பதாய் செய்திகள் மூலம் அறிந்தேன். அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம்.
2015ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது. அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள்?
முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல. அது, தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல. ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல. திமுகவின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

“முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்” என, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : land ,Stalin , Murassoli Land, MK Stalin
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...