×

பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு 300 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பணி நீக்கம் செய்வது குறித்து பரிசீலனை

சென்னை: ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தியதில் முறைகேடு செய்ததாக 300 ஆசிரியர்களை பதவி நீக்கம் செய்ய மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இயங்கி வரும் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணியில் சேர முடியும்.  கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வில் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதற்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் 12 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

ஆனால், இந்த தேர்வில் மதிப்பெண் போடும்போது பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக, ஆதாரத்துடன் புகார் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தேர்வுத்துறையின் இயக்குநராக இருந்த வசுந்தராதேவி, மீண்டும் அந்த விடைத்தாள்களை திருத்தும்படி உத்தரவிட்டார். அப்போது, முறையாக தேர்வு எழுதிய 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். 10 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் ஒவ்வொரு விடைத்தாள்களையும் ஆய்வு செய்தபோது, தேர்ச்சி பெறாத 10 ஆயிரம் மாணவர்களுக்கு, கூடுதலாக 50 மதிப்பெண்கள் போடப்பட்டு தேர்ச்சி அடைய வைக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டுபிடித்தனர். பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டதைக் கண்டு இயக்குநர் அதிர்ச்சி அடைந்தார். அதனால், முதலில் அந்த விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநருக்கு வசுந்தராதேவி பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் 120 தனியார் பள்ளி ஆசிரியர்கள், 180 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு 17பி மெமோ அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தற்போது வந்துள்ளது. அதில் விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் முறைகேடு செய்து 10 ஆயிரம் பேருக்கு தலா 50 மதிப்பெண்கள் போட்டு தேர்ச்சி அடைய வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை சேர்ந்த 180 ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்வது அல்லது பணி நீக்கம் செய்வது என இரண்டில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அந்தந்த பள்ளி நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யவும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டு கையும் களவுமாக சிக்கியுள்ள 300 ஆசிரியர்கள் தற்போது வேலை இழக்கும்நிலை எழுந்துள்ளது. இதனால் மேற்கண்ட ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

* கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆசிரியர்  பயிற்சி பட்டயத் தேர்வில் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
* அதற்கான  விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டது.  அதில் 12 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
* தேர்வு எழுதிய 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். 10 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
* தேர்ச்சி பெறாதவர்களுக்கு, கூடுதலாக 50 மதிப்பெண்கள் போடப்பட்டு தேர்ச்சி பெற வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
* 120 தனியார் பள்ளி ஆசிரியர்கள், 180 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு 17பி மெமோ அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : teachers ,layoffs , Training selection answer sheet, irregularity, 300 teachers, dismissal
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்