புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாரின் உடல்நிலையை பரிசோதித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்தபோது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் 2018ல் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், கட்சியில் இருந்து அவர் விலகினார்.
இந்நிலையில், சஜ்ஜன் குமாரின் வக்கீல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சஜ்ஜன் குமார் 10 கிலோ எடை குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் அமைக்கும் மருத்துவர் குழு சஜ்ஜன்குமாரின் உடல்நிலையை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.