திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ஆகம ஆலோசகராக ரமண தீட்சிதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் ரமண தீட்சிதர். முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியின்போது 60 வயது நிரம்பிய அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு ரமண தீட்சிதர் உட்பட வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து வம்ச பாரம்பரிய அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்றம் வம்ச பரம்பரை அர்ச்சகர் கட்டாய ஓய்வில் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் விருப்பம் உள்ளவரை அர்ச்சகர் பணியை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் பணியில் தொடர்வார்கள் என தற்போது உள்ள அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார். அதன்படி பணி நியமன விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ஆகம ஆலோசகராக ரமண தீட்சிதர் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து ரமண தீட்சிதர் கோயில் சேவையில் ஈடுபட உள்ளார்.