புதுடெல்லி: டெல்லியின் இந்திரப்பிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (ஐ.ஐ.ஐ.டி) பயின்று வரும் மாணவி சமீபத்தில் முடிவடைந்த கேம்பஸ் இன்டெர்வியூவில் கல்லூரியிலேயே அதிகப்படியான சம்பளத்திற்கு வேலை பெற்றுள்ளார். அதாவது, ரூ.1.46 கோடி சம்பளத்திற்கு வேலை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டு மாணவர்கள் ஆண்டுக்கு 43 லட்சம் மற்றும் 33 லட்சம் ஊதியத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் முன்னனி IIIT-களுள் ஒன்றான IIIT டெல்லியில் இதுவரை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வானவர்களிலேயே கம்ப்யூட்டர் பொறியியல் மாணவி தான் அதிகப்படியான சம்பளத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வருடந்தோறும் ஐ.ஐ.ஐ.டி கல்லூரியில் இறுதி ஆண்டு வேலைவாய்ப்பு தொடர்பாக மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த கல்லூரிகளில் பல முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை மாணவர்களை அதிக சம்பளத்திற்கு தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில், 2020 ஏப்ரலில் கல்லூரியை நிறைவு செய்யவுள்ள மாணவர்களுள் IIIT டெல்லியைச் சேர்ந்த 562 மாணவர்கள் தற்போது பல முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதில் 310 மாணவர்கள் முழுநேர பணியாளர்களாகவும், 252 மாணவர்கள் இன்டெர்ஷிப்பிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் கூகிள், மைக்ரோசாப்ட், அமேசான், கோல்ட்மேன் சாச்ஸ், அடோப், குவால்காம், என்விடியா, வாத்வானி ஏஐ, டபிள்யூடிசி, டவர் ரிசர்ச், எச்எஸ்பிசி மாத்வொர்க்ஸ், ஹார்மன் கார்டன், ரிலையன்ஸ் & சாம்சங் ஆர் அன்ட் டி ஆகிய நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐஐஐடி -டெல்லியில் இரண்டாவது கட்ட வேலை வாய்ப்பு டிசம்பரில் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 2021ம் ஆண்டில் படிப்பை நிறைவு செய்யவுள்ள பி.டெக் ப்ரீ-ஃபைனல் மாணவர்களில் (சி.எஸ்.இ / இ.சி.இ / சி.எஸ்.ஏ.எம் / சி.எஸ்.எஸ்.எஸ் / சி.எஸ்.டி) 108 மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் சலுகைகளைப் பல நிறுவனங்கள் வழங்கியுள்ளன. இன்டர்ன்ஷிப்பை வழங்கும் சில சிறந்த நிறுவனங்களில் நெட்ஆப் 4 சலுகைகள், என்விடியா 8 சலுகைகள், டவர் ரிசர்ச் 4 சலுகைகள், அடோப் 4 சலுகைகள், அமேசான் மற்றும் கூகிள் தலா ஆறு, மற்றும் பேஸ்புக் லண்டனில் இருந்து ரூ.3.31 லட்சம் உதவித்தொகையுடன் ஒருவரை இன்டெர்ஷிப் மூலம் தேர்வு செய்துள்ளது.