டெல்லி : பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்ற செய்தி வதந்தி என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் மீதும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அதனாலேயே இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும் இடைத்தேர்தல் வெற்றி மக்களின் மனநிலை மாற்றத்தை காட்டுகிறது என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை சந்தித்து 20 நிமிடம் பேசினேன். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மோடியிடம் எடுத்து கூறினேன். தமிழக அரசியல் சூழல் குறித்தும், மரியாதை நிமித்தமாகவும் பிரதமர் மோடியை சந்தித்தேன். கல்வி, விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு, தமிழுக்கான முக்கியத்துவம் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். நான் தெரிவித்த கருத்துகளை பிரதமர் கவனமாக கேட்டுக் கொண்டார். அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் மக்களிடம் சென்று சேருவதை தெரிவித்தேன். மராட்டிய
மாநில தேர்தல் விவகாரங்களில் அமித்ஷா தீவிரமாக உள்ளதால் அவரை சந்திக்கவில்லை. பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்ற செய்தி வதந்தியே. தமிழ் மாநில காங்கிரஸ் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்தார்.