குன்னூர்: குன்னூர் அடுத்துள்ள பழைய அருவங்காடு பகுதியில் மழையால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள பழைய அருவங்காடு பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே செல்லக்கூடிய ஓடையில் அதிக தண்ணீர் சென்று அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இதனால், அங்கு குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் நடைபாதை துண்டிக்கப்பட்டது. அந்த பகுதி உபதலை, கேத்தி ஆகிய இரண்டு பஞ்சாயத்து பகுதிகளின் எல்லை பகுதி என்பதால் பொது மக்கள் இது குறித்து புகார் அளிக்க சென்றால் உபதலை பஞ்சாயத்து அதிகாரிகள் இந்த பகுதி கேத்தி பஞ்சாயத்திற்கு ப்பட்டது எனவும் கேத்தி பஞ்சாயத்து அதிகாரிகள் இந்த பகுதி உபதலை பஞ்சாயத்திற்குட்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். தினந்தோறும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஓடையில் இறங்கி கடந்து சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைவில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.