×

ட்வீட் கார்னர்,..31வது பிறந்தநாள்... சிறுவன் ‘சிக்கு’வுக்கு கோஹ்லி உற்சாக கடிதம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி நேற்று தனது 31வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மனைவி அனுஷ்காவுடன் உள்ள புகைப்படத்தை ட்வீட் செய்துள்ள விராத், சிறுவன் ‘சிக்கு’வாக தான் இருந்ததை நினைவுகூர்ந்து அவனுக்கு எழுதுவது போன்ற கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.  அதில்... ‘ஹாய் சிக்கு, முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உனது எதிர்காலம் குறித்து என்னிடம் கேட்க பல்வேறு கேள்விகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். மன்னிக்கவும், அவற்றில் பலவற்றுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. ஏனென்றால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதில் ஒரு சர்ப்ரைஸ் இருந்தால் தான் வாழ்க்கையில் சுவாரசியமும், சவால்களை எதிர்கொள்வதில் திரில்லும் இருக்கும். ஏமாற்றங்களில் இருந்து பாடம் கற்கும் வாய்ப்பும் கிடைக்கும். இன்று உன்னால் அதை உணர முடியாது. இது போய் சேரும் இடத்தை விட பயணத்தின் சுவையான அனுபவங்கள் பற்றியது. இந்த பயணம் உண்மையிலேயே சூப்பர்!

வாழ்க்கையில் உனக்கு மிகப் பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றன விராத். ஆனால், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும். அப்படி வாய்ப்பு வரும்போது அதை இரு கைகளாலும் ஏந்திக்கொள். அதே சமயம் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளாதே. நீ தோல்விகளையும் சந்திப்பாய். யாரும் இதில் விதிவிலக்கில்லை.  ஒவ்வொரு முறை விழும்போதும் முன்பை விட உறுதியாக எழுவாய் என்பதை மறந்துவிடாதே. முதல் முயற்சியில் இல்லை என்றாலும், மீண்டும் முயற்சி செய். பலரால் நீ விரும்பப்படுவாய். சிலர் உன்னை வெறுக்கவும் கூடும். அவர்களுக்கு நீ யார் என்று கூட தெரியாது. அவர்களை பொருட்படுத்தாதே... தன்னம்பிக்கையை தளர விடாதே. அப்பா உனக்கு இன்று பரிசளிக்காத அந்த ஷூக்களை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாய் என்பது எனக்குத் தெரியும்.  ஆனால், காலையில் அவர் கொடுத்த அணைப்பு, உனது உயரத்தை பற்றி அவர் அடித்த ஜோக்குடன் ஒப்பிடுகையில் அது ஒன்றுமே இல்லை. இதை நினைத்து மகிழ்ச்சி கொள். சில சமயங்களில் அவர் கடினமாக நடந்துகொள்வது போலத் தெரியும். ஆனால், அது நீ எதிலும் சிறந்து விளங்கவேண்டும் என்ற அவரது விருப்பத்தின் வெளிப்பாடு தான்.

பெற்றோர் நம்மை பற்றி சரியாகப் புரிந்துகொள்வதில்லை என்று நினைப்பாய். ஆனால், அவர்கள் தான் எந்தவித எதிர்ப்பார்ப்போ நிபந்தனையோ இன்றி நம் மீது அன்பு செலுத்துவார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள். நீயும் அவர்கள் மீது அதே அன்பை திரும்பச் செலுத்து. உரிய மதிப்பு கொடுப்பதுடன் கிடைக்கும் நேரத்தை எல்லாம் அவர்களுடன் செலவழி. அப்பாவிடம் உனது அன்பை சொல். இன்னும் நிறைய இருக்கிறது. இன்று மட்டுமல்ல நாளை... அடிக்கடி சொல்லிக் கொண்டே இரு. இறுதியாக ஒன்று... உனது இதயம் சொல்கிறபடி நட. உனது கனவுகளைத் துரத்து, அனைவரிடமும் அன்பாகப் பழகு. பெரிதாய் கனவு கான்பது வாழ்க்கையில் எத்தனை பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த உலகுக்கு காட்டு. நீ நீயாகவே இரு. உனக்கு பிடித்தமான பரோட்டாவை ஒரு கை பார்! பின்வரும் நாட்களில் அவை ஆடம்பரப் பொருட்களாகிவிடக் கூடும்... ஒவ்வொரு நாளையும் சூப்பராக்கு. - இப்படிக்கு விராத் பிறந்தநாளையொட்டி கோஹ்லி ட்வீட் செய்துள்ள இந்த படமும், கடிதமும் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

Tags : Tweet Corner ,Birthday ,Kohli , 31st birthday, boy, kohli, letter
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி