×

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை: ஆணவ கொலையா? விசாரணை

துரைப்பாக்கம்: சென்னை காரப்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (24). காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2 மாதத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று  காலை காரப்பாக்கம்  பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு அருகில் உள்ள கடையில் முரளி தனது நண்பர்களுடன் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் பைக்கில் அங்கு வந்துள்ளார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடி விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த முரளியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியில் முரளி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்து கண்ணகி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முரளியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் ஆணவ கொலையாக இருக்கலாம் என்கிற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், முரளி ஏற்கனவே பணியாற்றிய கம்பெனியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அந்த பெண் தொடர்பை துண்டித்துவிட்டு, கவுசல்யாவை 2 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்ததும் தெரிந்தது.

இவர், காதலித்த அந்த பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், முரளியுடன் கள்ளத்தொடர்பு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இது, அந்த பெண்ணின் கணவருக்கும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.  இதனால், கள்ளத்தொடர்பு காரணமாக, அந்த பெண்ணின் கணவன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், கொலையாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.


Tags : marriage Investigation , Love marriage, assassination of youth, murder
× RELATED காதல் திருமணம் செய்த 2 மாதத்தில்...