மதுரை: இலங்கை, கொழும்புவை சேர்ந்த சங்கசிரந்தா, கொழும்பு கெனுமுல்ல முகாமைச் சேர்ந்த முகம்மது சப்ராஸ் ஆகிேயார் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, ‘‘தப்பிச்சென்ற இருவரும் கடந்த செப். 10ம் தேதி கொழும்பு தலைமையியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். இந்த தகவல் இலங்கை தூதரகத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது’’ என்றார். அரசு வக்கீல் தினேஷ்பாபு , ராமநாதபுரம் எஸ்பி தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், ‘‘பாம்பன் கடல்வழியாக இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாம்பன் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்துள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்டது தொடர்பாக கேணிக்கரை இன்ஸ்பெக்டருக்கு ெமமோ கொடுக்கப்பட்டுள்ளது. அவரது விளக்கத்திற்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இருவர் தப்பியது தொடர்பாக பாம்பன் போலீசில் உள்ள வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முடித்து விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். கேணிக்கரை ஆய்வாளருக்கு கொடுக்கப்பட்ட மெமோ மீதான மேல்நடவடிக்கையை 3 மாதத்திற்குள் முடிக்கவேண்டும். பாம்பன் கடல்வழியாக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர், குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவுவது அதிகளவு நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய கப்பல் படை மற்றும் தமிழக போலீசார் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவர்கள் விழிப்புடன் பணியாற்றி இச்சம்பவங்கள் நடக்கவில்லையென்பதை உறுதிபடுத்தவேண்டும். இந்த நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து 2020 பிப். 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.