×

தாய், தங்கை உள்பட எவரையும் விடாத கொடூரம் 100 பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றிய வாலிபர் கைது: செல்போன், லேப்டாப்கள் பறிமுதல்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆபாச படங்கள் அடங்கிய செல்போன், லேப்டாப்களையும் போலீசார் கைப்பற்றினர்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் இளம்பெண், ‘‘என்னுடைய புகைப்படத்தை  முகநூலில் ஒரு மர்ம நபர் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்து வைத்துள்ளார். அவர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

விசாரணையில், பெரிய காஞ்சிபுரம், மல்லிகை தெருவை சேர்ந்த முகம்மது ரியாஸ் (27) என்பவர் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி இருப்பதும், ராயப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் திட்ட அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடம் நைசாக பேசி வரவழைத்து பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் விசாரித்தனர். மேலும் அவருடைய செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது 100க்கு மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து அவரை தீவிரமாக விசாரித்தனர். அப்போது, முகம்மது ரியாஸ் திருவல்லிக்கேணியில் ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் வீடு எடுத்து அவருடன் தங்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இவர், தனது அலுவலகத்தில் உள்ள பெண் ஊழியர்களின் படங்களை ஆரம்பத்தில் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அதனை பார்த்து பலரும் அவருக்கு லைக் மற்றும் கமெண்ட் கொடுத்துள்ளனர். இதனால் அவரது முகநூலுக்கு அதிக வரவேற்பு வந்துள்ளது. இதை தொடர்ந்து தன்னுடன் குடும்பம் நடத்தும் இளம்பெண், அவரது தோழிகள் மற்றும் தனது தாய், சித்தி, அத்தை, தங்கை உள்ளிட்ட உறவினர்களின் படங்களை அவ்வப்போது ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவர் பல்வேறு இடங்களுக்கு போகும்போது பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் முக்கிய வீதிகளில் நடந்து செல்லும் பல்வேறு வயதுடைய பெண்களை அவர்களுக்கு தெரியாமல் படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முகம்மது ரியாசை போலீசார் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : women ,sister , mother ,sister, sexually ,100 women, ,cell phones, laptops
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது