×

ஐஐடி வளாகத்தில் மான்கள் வாழ ஏற்ற இடமில்லை: ஐகோர்ட்டில் வனத்துறை பதில் மனு தாக்கல்

சென்னை: சென்னை, ஐஐடி, மத்திய தோல் ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் மான்கள் வாழ ஏற்ற சூழ்நிலை தற்போது இல்லை என்பதால் அந்த மான்கள் உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று வனத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ) போன்ற வளாகங்களில் 1500 மான்கள் உள்ளன.இந்த மான்களை பிடிக்கவும்,வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவும் வனத்துறைக்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு தமிழக வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தமிழக வனத்துறையின் முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய்குமார் வஸ்தவா சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: சென்னையில் ராஜ்பவன், ஐஐடி வளாகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகம் ஆகிய இடங்கள் புள்ளிமான்கள் போன்ற வனவிலங்குகள் வாழ தகுதியான இயற்கை சூழல் நிறைந்த இடங்களாக உள்ளன. ஆனால் மனிதர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் காரணமாக இந்த இடங்களை விட்டு மான்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டது.அப்போது மான்களை நாய்கள் கடிக்கிறது. மேலும் பிளாஸ்டிக் பைகளை விழுங்குவது போன்ற காரணங்களால் மான்கள் இறப்பது அதிகரித்து வந்தது.கடந்த 2018ம் ஆண்டு சாப்பிட்ட பிளாஸ்டிக் ெசரிக்காமல் தரமணியில் 9 புள்ளி மான்கள் இறந்தன. இதேபோல் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 32 புள்ளி மான்கள்,  சென்னை ஐஐ டியில் 316 புள்ளி மான்கள் என கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் சுமார் 497 புள்ளிமான்கள்  இறந்துள்ளன.ஐஐடி வளாகத்தில் உயிரிழந்த மான்களை உடற்கூறு ஆய்வு செய்த போது, மான்களின் வயிற்றுப்பகுதியில் இருந்து 4 முதல் 6 கிலோ வரையில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, சென்னையில் உள்ள ஐஐடி,மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற இடங்கள் புள்ளி மான்கள் வாழ தகுதியற்ற இடங்களாக மாறியுள்ளதை கருத்தில் கொண்டு அந்த மான்களை வனத்துறை வேறு இடங்களுக்கு மாற்றி வருகிறது.கடந்த 2011-12 ம் ஆண்டுகளில் மெட்ரோ பணிகளுக்காக சென்னை நந்தனத்தில் உள்ள கோழிகள் வளர்ப்பு ஆராய்ச்சி மைய வளாகத்தில் இருந்த 42 புள்ளி மான்கள் கிண்டி உயிரியல் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.அதேபோல், 2014-15ம் ஆண்டுகளில் சென்னையின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த 323 புள்ளிமான்கள் பிடிக்கப்பட்டு கிண்டி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு தரமணி பகுதியில் சுற்றி திரிந்த 39 மான்கள் பாதுகாப்பாக எந்த காயங்களும் இன்றி பிடிக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இத்தகைய இடமாற்ற நடவடிக்கையால் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 32 மான்கள் உயிரிழந்த நிலையில்  இந்தாண்டு 2 மான்கள் மட்டுமே  உயிரிழந்துள்ளன. நகர வளர்ச்சி, வனப்பகுதி இல்லாத இடங்களில்  கட்டுமானப்பணிகள் காரணமாக ஆண்டுதோறும் 100 மான்கள் இறந்து வரும் நிலையில் அவை வாழ தகுந்த சூழலுக்கு இடமாற்றுவது மிக அவசியமானது. எனவே, இடமாற்றம் செய்வதால் மான்கள்  இறப்பதாக தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.2014-15ம் ஆண்டுகளில்சென்னையின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த 323 புள்ளிமான்கள் பிடிக்கப்பட்டு கிண்டி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


Tags : campus ,IIT ,Forest Department No ,Forest Department , No place , deer ,IIT campus, Forest Department
× RELATED கிம்ஸ் ஹெல்த் இலவச இதய மருத்துவ முகாம்...