சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்தார். அப்படியே பங்கேற்றாலும் பேசுவதை குறைத்து கொண்டு வந்தார். அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் கூட பங்கேற்ற விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. டாக்டர்கள் அறிவுறுத்தலின்படியே பேசுவதை தவிர்த்ததாக கூறப்பட்டது. தற்போது விஜயகாந்த் பூரண குணமடைந்துள்ளார். இதை நிரூபிக்கும் வகையில் அண்மையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு சில வார்த்தைகளை அவர் பேசினார். இது தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு:தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் வருகிற 7ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடு, கட்சியை மக்களிடம் எடுத்து செல்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்து வருகிறது. இதனால், வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் எத்தனை சதவீதம் இடங்களை அதிமுகவிடம் கேட்க வேண்டும். எத்தனை மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியை கேட்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் தலைமையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கூட்டம் நடக்கிறது. இதனால், அவர் தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் ஏதாவது முக்கிய முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.