சென்னை: தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வரும் 8ம் தேதி ஸ்ரீவரி புஸ்பயாகம் நடைபெற உள்ளதால், 5 டன் பூக்களை பொதுமக்கள் வழங்கலாம் என்று தமிழக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான வெங்கடாச்சலபதி கோயில் அமைந்துள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் தி.நகர் திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வழக்கத்தை விட இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்தநிலையில், நாளை மறுநாள் (8ம் தேதி) பிரமோற்சவத்தை முன்னிட்டு அன்று மாலை 5 மணி முதல் வரி புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு தலைவர் சேகர்ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:நாளை மறுநாள் (8ம் தேதி) பிரமோற்சவத்தை முன்னிட்டு அன்று மாலை 5 மணி முதல் வரி புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இந்த வரி புஷ்பயாகத்திற்கு 4 முதல் 5 டன் பூக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, பூக்களை காணிக்கையாக வழங்குபவர்கள் வரவேற்கப்படுகிறது. அதோடு, துளசி, சிவப்பு, மஞ்சள் நிற ரோஜா, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற சாமந்தி, சம்பங்கி, லில்லி, மருவம், தவனம், அரளி, அனைத்து வித நிற மல்லி, தாமரை, தாலம்பூ, கனகாம்பரம், சிருச்சிகம், மனோரஞ்சிதம், பாரிஜாதம், பன்னீர் ரோஸ், வாடாமல்லி, மரிக்கொழுந்து மற்றும் அனைத்துவித சிறப்பு வாய்ந்த மலர்களை 8ம் தேதி 3 மணிக்குள் பொதுமக்கள் காணிக்கையாக அளிக்கலாம்.