சென்னை: உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடந்தது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி உடனடியாக தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று சென்னையில் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் ெசய்ய தனி மென்பொருள் ஒன்றை தேசிய தகவலியல் மையம் உருவாக்கியுள்ளது. இந்த மென்பொருளில் வேட்புமனுக்களை பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
ஊராட்சி அமைப்புகளைச் சேர்ந்த உதவி ேதர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. இன்று நகர்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை தொடர்ந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மற்ற தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.