×

வீடு இல்லாததால் விபரீதம் பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் மீது ஆட்டோ ஏறி பரிதாப பலி: 3 பேர் படுகாயம்

சென்னை:சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய ஆட்டோ பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் அவரது மகள், மகன் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை சென்ட்ரலில் இருந்து மூலக்கொத்தளம் வரை சாலையோர பிளாட்பாரத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இரவிலும் பிளாட்பாரத்தில் தூங்குவார்கள். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் தூங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சென்ட்ரலில் சவாரி ஏற்றிக்கொண்டு மூலக்கொத்தளம் நோக்கி ஆட்டோ ஒன்று புறப்பட்டது. ஆட்டோவை தண்டையார்பேட்டை வரதராஜபெருமாள் கோயில் தெருவை சேர்ந்த காளியப்பன் (60) என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார்.

சென்ட்ரல் ரயில்நிலையம் தனியார் ஓட்டல் அருகே வந்தபோது நாய் குறுக்கே பாய்ந்ததால் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடியது. அப்போது, பிளாட்பாரத்தில் தூங்கிய அஞ்சலி (56), சித்ரா (39), இவரது மகன் பரன் (13), மகள் பவானி (11) ஆகியோர் மீது ஏறி இறங்கியது.இதில், பலத்த காயமடைந்த அஞ்சலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்ரா, பரன், பவானி ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்தவர்களை உடனே சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அஞ்சலியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் காளியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆட்டோ மோதி பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் பலியான சம்பவம் சென்ட்ரல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : disaster ,Death , Homelessness, flat, woman, rides, death
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...