×

அருப்புக்கோட்டை அருகே அடிப்படை வசதியின்றி மக்கள் கடும் அவதி...அதிகாரிகள் வேடிக்கை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள மேலத்தெரு அருந்ததியர் காலனியில் அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் மேலத்தெரு அருந்ததியர் காலனி உள்ளது.  இங்கு சுமார் 60 வீடுகள் உள்ளன. இந்த காலனி அருகே உள்ள தும்பக்குளம் கண்மாயிலிருந்து மழை  காலங்களில் வெளியேறும் உபரி நீர் செல்லும் ஓடை அருந்ததியர் காலனியை ஒட்டி செல்கிறது. அங்கிருந்து ஓடை வழியாக ராமசாமிபுரம் கண்மாய்க்கு மழைநீர் சென்றடையும். பல வருடங்களாக இந்த ஓடையை பராமரிக்காமல் விட்டதால்  செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

இதில் கழிவுநீரும் குளம்போல் தேங்கி உள்ளது. மழை காலத்தில் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீர் ஓடை வழியாக செல்ல முடியாமல் காலனிக்குள் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கூட  தண்ணீர் காலனி வீடுகளுக்குள் சென்று விட்டது. ஓடையை தூர்வாரி பராமரிப்பு செய்ய வேண்டும் என காலனி மக்கள் புகார் கொடுத்தும் ஊராட்சியில் நடவடிக்கை இல்லை. இந்த பகுதியில் ஆண்கள், பெண்கள் குளியலறை உள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனருகே மகளிர் கழிவறையும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. தெருக்களில் உள்ள  வாறுகால்கள் முறையாக கட்டப்படவில்லை.  கட்டி முடிக்கப்பட்டு சில நாட்களியே பெயர்ந்து விட்டது.  இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.  

மேலும் ஊராட்சி மூலம் வழங்கக்கூடிய தண்ணீரும் 5 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டும் தான் விடுகின்றனர். இதனால் போதுமான தண்ணீர் கிடைக்காததால் ஒரு குடம் தண்ணீர் ரூ.15க்கு வாங்கும் நிலையில் உள்ளனர்.  இங்குள்ள மினிபவர் பம்பும் காட்சிப்பொருளாக உள்ளது. தெருவிளக்குகள் சரிசர எரியாததால் காலனி மக்கள் வசூல் செய்து சொந்த செலவில் தெருவிளக்குகளை பராமரித்து வருகின்றனர். மேலும் காலனி வழியாக செல்லும் கஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து ராமசாமிபுரம் செல்லும் ரோடு குண்டும்,  குழியுமாக உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சியில் புகார் செய்தும் பயனில்லை. எனவே கஞ்கநாயக்கன்பட்டி அருந்ததியர் காலனிக்கு அடிப்படை வசதி செய்து தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது. இது குறித்து ராமசாமிபுரத்தை சேர்ந்த கணேஷ்குமார் கூறுகையில்,‘‘ கஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து ராமசாமிபுரம் செல்லும் சாலை 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. கஞ்சநாயக்கன்பட்டி பகுதி மக்கள் நான்குவழிச்சாலை வழியாக  அருப்புக்கோட்டைக்கு செல்லாமல் குறுக்குச்சாலையாக இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். தற்போது இச்சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கையும்  இல்லை’’என்றார்.


Tags : Aruppukkottai , People near Aruppukkottai without basic amenities ... Officials fun
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...