×

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத்தடை கோரி தொடரப்பட்ட வழக்கு: இயக்குனர்கள் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர்கள் உரிய பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் வாழ்க்கை விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிப்பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்கு தெரியும் என்றும், படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்பு உள்ளதால் தன்னுடைய அனுமதி இல்லாமல் படம் எடுக்க அனுமதிக்க கூடாது என்று தீபா தரப்பில் வாதம் செய்யப்பட்டது. மேலும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பினர் ஜெயலலிதாவின் கன்னியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறதா என்பதை நாம் ஆராய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி இது தொடர்பாக நவ. 14-ம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர்கள் ஏ.எல்.விஜய் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Tags : Jayalalithaa ,Case ,Court orders directors , Jayalalithaa, Directors, highcourt
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...