×

அரசரடி வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வருசநாடு: வருசநாடு அருகே அரசரடி வனப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். வருசநாடு அருகே அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை, பொம்மராஜபுரம் வனப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசரடி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது, இதனால் யானைகள் வனப்பகுதியிலிருந்து தார்ச்சாலை பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலைகளில் இரவு நேரங்களில் தூங்குவது வாடிக்கையாகி விட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தகவலறிந்த மேகமலை வனத்துறை வனச்சரகர் சதீஷ்கண்ணன் மற்றும் வன அதிகாரிகள் காட்டுயானைகள் குறித்து கிராமமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டூவீலர், நான்கு சக்கரம் வாகனங்களில் இரவில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களை பகல் நேரங்களில் மட்டும் செல்வதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வருசநாடு மஞ்சனூத்து வன சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்’’ என்று கூறினர்.

Tags : Elephants
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...