×

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்களில் 40% பேர் வேலைக்கு திரும்பவில்லை

திருப்பூர்: தீபாவளி பண்டிகைக்கு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்ற தென் மாவட்ட, வட மாநில தொழிலாளர்கள் 40 சதவீதம் பேர் திருப்பூர் திரும்பாததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூரில் நூல்மில், நிட்டிங், சலவை பட்டறை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங் ஆகியவற்றைக் கடந்து கட்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என்று பல கட்டங்களின் வழியாக பின்னலாடை உற்பத்தி முழுமையடைகிறது. ஒவ்வொரு தொழில் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களும், சுமார் 6 ஆயிரம் சிறு, குறு ஜாப்-ஒர்க்  நிறுவனங்களும் திருப்பூரில் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 27ம் தேதி தீபாவளி பண்டிகை முடிந்தது.

ஆண்டுதோறும் பனியன் கம்பெனி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது வழக்கம். பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடந்த மாதம் 25ம் தேதி தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை வழங்கி விடுமுறை அளித்தது. இதைத்தொடர்ந்து பண்டிகையை கொண்டாட தென் மாவட்டம் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில்  40 சதவீதம் பேர் பண்டிகை முடிந்து 9 நாட்கள் கடந்த நிலையில் இன்னும் திருப்பூர் திரும்பாமல் உள்ளனர்.

திருப்பூரில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளவர்கள் மட்டுமே வேலைக்கு திரும்பியுள்ளனர். குழந்தைகள் இல்லாத தம்பதிகள், திருமணம் ஆகாத வாலிபர்கள் இதுவரை திருப்பூருக்கு திரும்பி வரவில்லை. இதில், 20 சதவீதம் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, போனஸ் பற்றாக்குறை ஆகிய காரணங்களுக்காக  வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேரும் நிலையில் உள்ளனர்.  தொழிலாளர்கள் மீண்டும் தங்களுடைய நிறுவன வேலைக்கு வருவார்களா? இல்லை வேறு நிறுவனங்களுக்கு செல்வார்களா? என்ற தகவல் எதுவும் தெரியாததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

Tags : residents ,Diwali , Diwali
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது