×

காவிரி டெல்டாவிற்கு ஒதுக்கிய யூரியா கள்ளச்சந்தையில் விற்பனையா?

நிலத்தடி நீர் உள்ள பகுதியில் கரும்பாலை உள்ள சுற்று வட்ட பகுதியில் ஒருசில விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வார்கள். காவிரி டெல்டா மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி நெல் சாகுபடி என்ற நிலையில் நெல் பயிறுக்கு நட்ட 5 வது நாளில் அடி உரமாக மற்ற உரத்துடன் ஏக்கருக்கு 25 கிலோ யூரியா கலந்து தெளிக்கப்படும். அதைத் தொடர்ந்து மேலுரமாக இரண்டு அல்லது மூன்று முறையும் மற்ற உரத்துடன் யூரியா கலந்து தெளிக்கப்படும். இதேப் போல் நேரடி நெல் விதைப்புக்கும் உரம் இட வேண்டும். தற்போது காவிரி டெல்டா பகுதியில் குறிப்பாக நிலத்தடி நீர் இல்லாத இடங்களில் மேட்டூர் அணை தண்ணீரை நம்பி நெல் சாகுபடி செய்யப்படும் பகுதியில் நீண்ட கால நெல் ரகம், மத்திய கால நெல் ரகம், குறுகிய கால நெல் ரகங்களை விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் கால தாமதத்துடன் குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் நேரடி நெல் விதைப்பு செய்த விதைகள் மழை நீரில் முளைத்து வளர்ந்தது. நேரடி நெல் விதைப்பு செய்து முளைத்த 25 நாற்களுக்குள் தண்ணீர் வைத்து களை எடுத்தல் முதல் உரமிடுதல் போன்ற பணியை செய்தாக வேண்டும். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் கால தாமதத்துடன் குறைந்த அளவு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழை மற்றும் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு பயிறுக்கு தண்ணீர் வைத்து களை எடுத்தல் பணியை செய்து வருகின்றனர்.

இந் நிலையில் பயிறுக்கு முதல் உரமாக யூரியா, டி.ஏ.பி. உரம் இட்டால் பயிர் பச்சை பிடித்து, தூர் வெடிக்கும். எந்த உரம் கொடுக்கும் போது யூரியா கலந்து தெளித்தால் பயிருக்கு நைட்ரஜன் சத்து கிடைத்து, பயிர் பச்சை பிடித்து ஒலி சேர்க்கை நடைபெற்று பயிர் தரமாக வளரும். தற்போது முதல் மற்றும் இரண்டாம் உரம் இடும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் உரம் இட முக்கியமான உரமான யூரியா தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய பயிர் கடன் பெறுபவர்களுக்கு கடனில் ஒரு பகுதி தொகைக்கு உரமாக வழங்கப்படும். தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா தட்டுப்பாட்டால் மற்ற உரங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தனியாரிலும் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் யூரியா உரம் கிடைக்காததால் மற்ற உரங்களை நெல் பயிருக்கு தெளிக்க முடியாமல் உள்ளனர். யூரியா உர தட்டுப்பாட்டால் தற்போது நெல் பயிர்கள் பசுமை குறைந்து வெளி பச்சையாக காணப்படுவதுடன் திடமான பயிராக இல்லை.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளை கேட்டால் கடந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டத்திற்கு கிடைத்த யூரியா அளவை விட மூன்றில் ஒரு பங்கு யூரியா கூட வர வில்லை என்று கூறுகின்றனர். அரசாங்கத்திற்கு உரதட்டுப்பாடு பற்றி முன்பே எடுத்து கூறி நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறுகின்றனர். தற்போது காவிரி டெல்டா மாவட்டத்திற்கு ஒதுக்கி வரவேண்டிய யூரியா என்ன ஆச்சு, காவிரி டெல்டா மாவட்டத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட யூரியா ராமநாதபுரம் போன்ற மாவட்டத்தில் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய அனுப்பப்பட்டு விட்டதா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். உடன் மாநில அரசு காலத்தில் பயிருக்கு யூரிய உரம் இட தொடக்க வேளாண்மை வங்கி மற்றும் தனியார் கடைகளுக்கு தேவையான யூரியா உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் தேவையா அளவை போர்கால அடிப்படையில் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாய சங்க பொருளாளர் புருஷோத்தமதாஸ் கூறுகையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டு போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில் கால மாதமாக விவசாய பணி மேற்கொள்ளப்பட்டது. குறைவான தண்ணீர் வந்த போது வாய்க்காலின் தலைப்பு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்த நிலையில், அங்கு களை எடுத்தல், உரம் இடுதல் போன்ற சாகுபடி பணி முன்கூட்டியே நடைபெற்றது. அந்த விவசாயிகளுக்கு மட்டுமே யூரிய கிடைத்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் கால தாமதமாக சாகுபடி பணி செய்த மற்ற விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்காததால் விவசாயிகள் உரம் இட முடியாததால் பயிர்கள் வளர்ச்சி குன்றி, பசுமை இழந்து, தூர் வெடிக்காமல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உடன் தமிழக அரசு யூரியா தட்டுப்பாடு இல்லாமல் வழங்க போர் கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Cauvery Delta , Urea
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...