×

உலக தரத்தில் சேலம், தலைவாசலில் 396 கோடியில் புதிய கால்நடை பூங்கா: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: உலக தரத்தில் சேலம், தலைவாசலில் 396 கோடி செலவில் அமைய உள்ள கால்நடை பூங்கா குறித்து முதல்வர் எடப்பாடி நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலைைய ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடை பூங்கா ஒன்று நிறுவப்பட உள்ளது. மூன்று பிரிவுகளாக அமைய உள்ள இந்த பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியின பிரிவுகள் அமைக்கப்படும்.

மேலும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படும். இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி மீன் மற்றும் முட்டை போன்ற உணவு பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்படும். மூன்றாம் பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சேலம், தலைவாசலில் ₹396 கோடியில் உலகத்தரத்தில் அமைய உள்ள கால்நடை பூங்கா குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Salem ,livestock park ,ministers ,consultation ,CM , World Class, Salem, Headquarters, New Livestock Park, Ministers, CM
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...