×

இடுப்பில் துணியால் கட்டி கிணற்றில் குதித்தார் மகளை கொன்று நர்ஸ் தற்கொலை : கணவன் இறந்ததால் விபரீத முடிவு

விழுப்புரம்: சென்னையில் வேலை செய்த இடத்தில் பிரச்னையால் கணவன் தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாமல், மகளை கொன்று கிணற்றில் குதித்து நர்ஸ் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நேமூர்  ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் சரசு (33). இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும்  கடந்த 7 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கார்த்திகேயன் சென்னை மறைமலைநகர் கார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். சரசு திருவள்ளூர் மாவட்ட அரசு  மருத்துவமனையில் நர்சாக இருந்தார். இதனால் சென்னையில் வீடு  வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களது மகள் வைஷாலி (6). மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில்   கார்த்திகேயன் வேலை செய்த கம்பெனியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த சரசு வீட்டை  காலி செய்து விட்டு நேமூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.  நர்சு வேலைக்கும் செல்லாமல் விருப்ப ஓய்வு பெற்று விட்டார்.

இந்நிலையில் கணவர் இறந்து 6 மாதங்களாகியும் அவரது பிரிவை தாங்க முடியாமல்  சரசு மனவிரக்தியுடன் காணப்பட்டாராம். மேலும் தனது பெற்றோரிடம் கணவர் இல்லாத  உலகில் வாழ பிடிக்கவில்லை என்று புலம்பி வந்தாராம். பெற்றோர் அவரை  சமாதானம் செய்து வந்துள்ளனர். இதனிடையே நேற்று அதிகாலை கணவரின் நினைவு  மீண்டும் வந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரசு, தூங்கிக்கொண்டிருந்த மகள் வைஷாலியை எழுப்பி  வெளியே வந்துள்ளார். பக்கத்து தெருவில்  விவசாய கிணறு உள்ளது. அங்கு வந்ததும் மகள் வைஷாலியை தனது  இடுப்பில் துண்டால் கட்டிக்கொண்டு கிணற்றில் பாய்ந்துள்ளார். இதில் தாய்,  மகள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதனிடையே நேற்று காலை அவ்வழியே  சென்றவர்கள் தாய், மகள் சடலங்களைப்பார்த்து விட்டு ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கஞ்சனூர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சென்று சடலங்களை  மீட்டனர்.  இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோரை வீட்டில் வைத்து பூட்டிய மகள்

ஏற்கனவே  பலமுறை தற்கொலை செய்து கொள்வதாக சரசு மிரட்டி வந்ததால் அவரது பெற்றோர் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். எப்போதும் மகளுடனேயே இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை தற்கொலை முடிவு எடுத்த சரசு, பெற்றோர் தன்னையும்,  குழந்தையையும் காப்பாற்றி விடுவார்கள் என எண்ணி பெற்றோரை வீட்டில்  வைத்து வெளிக்கதவை பூட்டிவிட்டு சென்று மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

Tags : nurse ,suicide , nurse committed suicide,killing, daughter,jumping into a well
× RELATED சைரன் விமர்சனம்