கூடலூர்: முதுமலையில் யானை களுக்கு நேற்று எடை பரிசோதனை செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, பாம்பேக்ஸ், ஈட்டி மரம் உள்ளிட்ட மூன்று வளர்ப்பு யானைகள் முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடை பரிசோதனை மேற்கொள்ளப்படும். தற்போது பருவமழைக்கு பிந்தைய எடை பரிசோதனை நேற்று தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடியில் 14 யானைகளுக்கு செய்யப்பட்டது. யானைகளின் எடை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முகாமுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட 13 வயதுள்ள மசினி யானை தற்போது 2640 கிலோ எடை உள்ளதாகவும் முகாமுக்கு கொண்டு வரப்பட்டபோது இந்த யானையின் எடை 1900 கிலோவாக இருந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.