×

தெலுங்கானாவில் நிகழ்ந்த விபரீதம்: வட்டாட்சியர் அலுவலகத்திலேயே பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியரை மர்ம நபர் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாப்பூர்மெட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்பவர் தாசில்தாராக பணி புரிந்து வருகிறார். இன்று வழக்கம் போல் அவரது அலுவலக  பணியில் ஈடுபட்டிருந்த போது மதியம் 1.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் தாசில்தார் விஜயா ரெட்டியை சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் தாசில்தாரை சந்திப்பதற்கு அனுமதித்துள்ளார். சுமார் அரைமணி நேரமாக தாசில்தாருடன் பேசிய மர்மநபர் திடீரென வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே வந்த சில நொடிகளிலேயே விஜயா ரெட்டி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் அலறி அடித்துக்கொண்டு எறிந்த நிலையில் வெளியே வந்துள்ளார். தாசில்தார் தீக்காயங்களுடன் வெளியே வருவதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர். இதில் இருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் விஜயா ரெட்டி அலுவலக வளாகத்திற்குள் இருந்து வெளியே வர முயற்சி செய்த போது அந்த இடத்திலேயே பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தாசில்தார் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மர்மநபர் தற்போது ஐ.எஸ் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மர்மநபர் எதற்காக கொலை செய்தார்? பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? மர்மநபருக்கும் தாசில்தாருக்கும் இடையே எவ்வித பிரச்சனை என்பது குறித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெலுங்கானாவில், விவசாயி சுரேஷ் என்பவரிடம், நில பத்திர பதிவுக்கு, வட்டாட்சியர் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விவசாயி சுரேஷ், வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.  பட்டப்பகலில் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தாசில்தார் பெட்ரோல் ஊற்றி ஏரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : accident ,Telangana ,Woman Dasildar ,Taluk ,office girl , Telangana, Regional Office, Woman Tasildar, Petrol, Burned
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!