சென்னை: நொறுக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மாஞ்சா தடவிய நூல் அறுத்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலியாகி உள்ள நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை நிகழ்ந்த மரணங்களின் நிலவரம் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் கடந்த 2006ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் என்பவர் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து 2007ம் ஆண்டு வடசென்னை பகுதியில் இரண்டு வயது சிறுவனும், 2011ம் ஆண்டில் சென்னை எழும்பூரில் ஷெரீனா பானு என்ற 4 வயது சிறுமியும் மாஞ்சா நூல் அறுந்து உயிரிழந்தனர்.
இதேபோன்று 2012ம் ஆண்டு அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயிரிழந்த நிலையில், அதே ஆண்டில் தண்டையார்பேட்டை அருகே வைத்தியநாதன் மேம்பாலத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவரும் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 2013ம் ஆண்டு சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள பாலத்தில் மந்தைவெளியை சேர்ந்த ஜெயகாந்த் என்பவர் உயிரிழந்தார். 2015ம் ஆண்டு பெரம்பூர் பாலத்தில் பெற்றோருடன் சென்ற 5 வயது சிறுவன் அஜயும் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 2017ம் ஆண்டு கொளத்தூரை சேர்ந்த சிவப்பிரகாசம் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து பலியானார்.